ஏழைகளுக்குச் செய்யும் உதவி

கடவுள் நமக்கு தந்தையாக இருக்கிறார். நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். எந்த ஒரு தந்தையும், தனது பிள்ளை தனக்கு மதிப்பையும், மரியாதையையும் மற்றவர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய அளவுக்கு, தனது பிள்ளை நடக்க வேண்டும், என்றுதான் நினைப்பார். தன்னுடைய பிள்ளையினால், தனக்கு மதிப்பும், புகழும் வரும்போது, அதனுடைய பூரிப்பில், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நமது தந்தையாக இருக்கிற கடவுள் மகிழ்ச்சியடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான், இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது.

இறைத்தந்தையின் பிள்ளைகளாக, அவரைப் பெருமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் கடினமானது அல்ல, மாறாக, மிக எளிதான காரியங்கள் தான். சின்னஞ்சிறிய சகோதர, சகோதரிகள் என்று இயேசுவால் அழைக்கப்படுகிற, ஏழைகள், எளியவர்கள், தேவையில் இருக்கிறவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை, கைம்மாறு கருதாமல் செய்வதுதான், இறைத்தந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள். அதைச்செய்வதை, இந்த நற்செய்தி வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது. வானகத்தந்தையை மகிழ்ச்சிப்படுத்த, நம்மால் முடியாத, மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும், என்று இயேசு எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்புவது ஏழை, எளியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உதவ முன்வர வேண்டும் என்பதுதான். அதனைச் சிறப்பாக செய்ய நமக்கு இயேசு அழைப்புவிடுக்கிறார்.

நமது வாழ்வில், நாம் செய்யக்கூடிய பல காரியங்கள் நிச்சயம் வீணான காரியங்கள் தான். தேவையில்லாமல் பல இலட்சம் ரூபாய்களை, வழிபாடு என்ற பெயரில், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் செய்துகொண்டு இருக்கிறோம். பணத்தை விரயமாக்குகிறோம். ஆனால், தேவையானதைச் செய்ய, நாம் மறந்துவிடுகிறோம். அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். அதனைச் செய்வதற்கு நாம் முன்வருவோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.