ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8
”ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்”

விவிலியத்தில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? ஏழைகளை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏழைகள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல, கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும் ஏழைகள் என்று சொல்கிறோம். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற நியதில்லை. ஆனால், பணம் இருந்தாலும், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்கிறவர்கள், கடவுளை தங்களது முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள். இறைவன் இந்த இரண்டு பேரையுமே கருத்தில் கொள்கிறார். அதாவது, இந்த உலகத்தில் யாரெல்லாம் நிர்கதியில்லாமல் இருக்கிறார்களோ, கடவுளே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும், கடவுள் கண்ணோக்குகிறார். அவர்களது குரலுக்கு செவிசாய்க்கிறார்.

கடவுள் எப்போதுமே, இந்த சமுதாயத்தின் தாழ்நிலையில் இருக்கிறவர்களை கைதூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அவர்களது நிலைகண்டு மனம் வெதும்புகிறவராக, அவர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, முழுமையான முயற்சியை எடுக்கிறவராக இருக்கிறார். அவர்களை ஒருபோதும் அவர் கைவிடுவதில்லை. அவர்கள் மீது முழுமையான பற்றுள்ளவராக இருக்கிறார். அவர்களை எந்த தீங்கும் அணுகாதவாறு பாதுகாக்கிறவராக இருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையிலும், இந்த உலகத்தின் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம், அவர்களை வாழவைக்கும் தெய்வமாக இறைவன் இருக்கிறார்.

இறைவன் எல்லாருக்குமான இறைவன். அவர் யாரையும் வருத்தப்பட விடுவதில்லை. தன்னுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு நொடிப்பொழுதும், நம்மை பாதுகாத்துக்கொண்டிருக்கிறவர். அந்த இறைவனிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.