ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமை வாழ்வை வழங்குகிறார்

திருப்பாடல் 103: 6 – 7, 8 – 9, 10 – 11, 12 – 13

மனிதரின் பார்வை வேறு, இறைவனுடைய பார்வை வேறு. இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள், தங்களுக்கென்று ஒரு சில ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அது முற்காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், தற்காலத்தில் அதனை தொடர்ந்து கொண்டே வருகின்றனர். எந்த ஒரு சமூகமும் எப்போதும் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தே வந்திருக்கிறது. நியாயம், அநியாயம் என்று பாராமல், பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மதிக்காமலும், ஒருவருக்கு தேவையில்லாத மரியாதையையும் இந்த சமூகம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், இறைவன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, இறைவன் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்கள் அடிமைத்தளையிலிருந்து மீண்டு எழுவதற்கு உதவி செய்தார். அவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் மதிக்கப்பட, மாண்போடு வாழ அவர்களை கரம் பிடித்து தூக்கிவிட்டார். அதேவேளையில் அவர்கள் தவறு செய்தபோது, அவர்களைத் தண்டிப்பதற்கு தயங்கவில்லை. ஆக, கடவுளின் பார்வையில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற இரண்டு பிரிவுகளே இருக்கிறது. தவறு செய்கிறபோது தண்டித்து திருத்துவதும், நன்மைகள் செய்கிறபோது, அவர்கள் மீது பரிவு கொள்வதும் கடவுளின் பண்பாக இருக்கிறது.

கடவுள் முன்னிலையில் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும். மனிதர்கள் பார்வையில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல, மாறாக, கடவுளின் பார்வையில் நாம் சிறந்த மனிதர்களாக வாழ்கிறோமா? என்பதுதான் நாம் அடிக்கடி எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.