ஒன்றுபட்ட வாழ்வு

தோமா இயேசு மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மீது மட்டற்ற அன்பும் கொண்டிருந்தார். அதனால் தான், மற்ற சீடர்கள் யூதேயா செல்லத்தயங்கியபோது (யோவான் 11: 16) அவர் துணிவோடு செல்வதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் இறப்பு சீடர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. அந்த இழப்பு ஈடு கட்ட முடியாதது. இயேசுவின் வாழ்க்கை இவ்வளவு குறைந்த நேரத்திற்குள் முடிந்துவிடும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே சீடர்கள் ஒவ்வொருவருமே கவலைபடிந்த ரேகையோடு இருக்கிறார்கள்.

சீடர்கள் ஒன்றுபட்டு, கவலையோடு ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இருக்கிறபோது, தோமா அவர்களோடு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதை தோமா விரும்பவில்லை. எனவேதான், அவர் வெளியே செல்கிறார். துன்பம் என்பது தனிமையிலே நம்மைச் சோர்வுறச்செய்யக் கூடியது. நமது விசுவாசத்தை தளர்ச்சியுறச்செய்யக் கூடியது. துன்பநேரத்தில், ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாளராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. ஒன்றுபட்டு வாழாமல், நம்மையே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறபோது, இயேசுவை சந்திக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிடுகிறோம். கடவுள் அனுபவத்தை பெற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம். தோமாவின் வாழ்விலும் அதுதான் நடக்கிறது. தனிமையை விரும்பினார். இறுதியில் உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தை இழந்துவிடுகிறார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு அல்ல. அது மற்றவரோடு இணைந்த வாழ்வு. மற்றவர்களோடு ஒன்று சேர்ந்து வாழ்கிற வாழ்வு. துன்பமோ, கவலையோ, எதுவென்றாலும், நாம் மற்றவர்களோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வு. அத்தகைய வாழ்வை நாம் சிறப்பாக வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.