ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…

லூக்கா 11:1-4

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும்.

1. காலை சொல்லுங்க…
காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக போற்றி புகழ்ந்து நம் தேவைகளை அவர் பாதத்தில் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது. காலையில் கடவுளே நான் கனிவோடு நடக்க வேண்டும். என்னுடைய பேச்சு, மூச்சு அனைத்திலும் கனிவு இருக்க வேண்டும் என்று மன்றாட வேண்டும்.

2. மதியம் சொல்லுங்க…
மதியம் நன்கு சாப்பிட்ட பிறகு கடவுளின் ஆச்சரியமான செயல்களை அசை போட வேண்டும். மதியம் மறக்காமல் பிறர் எனக்கு எதிராக பேசியவைகள், செய்தவைகளை மன்னிக்க நல்மனம் தாரும் ஆண்டவரே என மன்றாட வேண்டும். அதற்கு இந்த ஜெபத்தை சொல்லி மன்றாட வேண்டும்.

3. இரவு சொல்லுங்க…
இரவு கடவுள் நாள் முழுவதும் காத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். அன்றைய நாள் செய்த செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து பார்க்க வேண்டும். தவறுகள் கண்டிப்பாக இருக்கும். இந்த மந்திரத்தைச் சொல்லி மறுநாள் தவறுகள் ஏற்படாமல் இருக்க ஜெபிக்க வேண்டும். அருள் வேண்ட வேண்டும்.

மனதில் கேட்க…
1. ஆண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம், அதன் வல்லமை தெரியுமா?
2. ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லி ஆண்டவரின் அதிசயத்தை அனுபவிக்கலாமா?

மனதில் பதிக்க…
தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! (லூக் 11:2)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.