ஒழுங்குகள் காட்டும் ஒழுக்கம்

திருச்சட்ட அறிஞர் ஒருவர், தங்களை இயேசு இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இயேசு இன்னும் அதிக வேகத்தோடு அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். தங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டங்களை, விளக்கினார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில், யாரும் 1000 அடிக்கு மேல் நடக்கக்கூடாது. நடந்தால் அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதியில், ஊருக்கு தொடக்கத்தில் ஒரு கயிறு குறுக்கே கட்டியிருந்தால், அந்த கயிறு வரை, ஒருவரின் வீடாக மாறிவிடும். எனவே, அந்த கயிற்றிலிருந்து, அவர் இன்னும் 1000 அடிகள் நடக்கலாம்.

அதே போல, ஏதாவது ஒரு இடத்தில், இரண்டு வேளைக்கான உணவை வைத்தால், அதுவரை அந்த மனிதரின் வீடாக மாறிவிடும். அதிலிருந்து இன்னும் 1000 அடிகள் அவர் நடந்து செல்லலாம். இந்த ஒழுங்குகளையெல்லாம் கடவுள் நிச்சயம் கொடுக்கவில்லை. தாங்கள் நினைத்ததை எல்லாம், இந்த திருச்சட்ட அறிஞர்கள் ஒழுங்குகள் என்ற பெயரில் மக்களைப் பின்பற்ற வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏதாவது வருகிறபோது, இதுபோன்ற, குறுக்கு வழியைப் பின்பற்றி, அந்த ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார்.

ஒழுங்குகள் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ஒன்றும், அதிகாரவர்க்கத்தினருக்கு ஒன்றுமாக இருந்தால், அது எதிர்க்கப்பட வேண்டும். இன்றைக்கு, இருப்பவர்களுக்கு ஒரு ஒழுங்கு, இல்லாதவர்க்கு ஒரு ஒழுங்கு என்று, ஏழை, எளிய மக்களை ஒடுக்குகின்ற வழிமுறைகளை மக்களாட்சி என்ற பெயரில், அரசியலவாதிகள் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் இதனை உணர்ந்தால் தான், இந்த முடிச்சுகளை அவிழ்க்க முடியும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.