கடவுளிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர். திருப்பாடல்கள் 2:12.

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

நமக்கு விடுதலை கொடுக்கும்படிக்கும், நம்மை மீட்டு பாதுக்காக்கும் படிக்கும் நமக்காக தமது ஜீவனை கொடுத்து தமது இரத்தத்தினால் கழுவி தூய்மையாக்கி நமக்கு ஆசீரை வழங்கியுள்ளார். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து,மற்றவர்களுக்கும் சொல்லி அவரின் வருகைக்கு ஆயத்தமாகும்படி செய்வது நம் ஒவ்வொருவரின் மேல் விழுந்த கடமையாக கருதி செயல்படுவோம். ஏனெனில் அவர் சினங்கொள்ளாதபடிக்கும் வழியில் யாரும் அழிந்து போகாதபடிக்கும் அவரது காலடிகளை முத்தமிட வேண்டும் என்றும் இல்லையேல் அவரது சினம் விரைவில் பற்றி எரியும் என்று சங்கீதம் 2:12 ல் வாசிக்கிறோம்.அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றவர்கள். நாமும் அந்த பாக்கியத்தை பெற்று மற்றவர் களும் பெற்றுக்கொள்ள வழிக்காட்டுவோம்.

போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான். ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன். நீதிமொழிகள் 16:20. அவரை நம்பாமல் அலட்சியமாய் இருப்பவர்களின் மேல் அவரது சினம் பற்றி எரியும். சுருளேடு சுருட்டப்பட்டுள்ளதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறையும். மலைகள், தீவுகள் எல்லாம் நிலைபெயர்ந்து போகும், மண்ணுலகில் அரசர்கள் உயர்குடிமக்கள், ஆயிரத்தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக்குடிமக்கள்  ஆகிய அனைவரும்
குகைகளிலும், மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொள்வார்கள். அவர்கள் அந்த மலைகளிடமும், பாறைகளிடமும், எங்கள் மீது விழுங்கள், அரியணைமேல் வீற்றிருப்பவருடைய
முகத்தினின்றும், ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில்,அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது, அதற்கு முன் நிற்க யாரால் இயலும்? என்று புலம்புவார்கள். திருவெளிப்பாடு 6:14 to 17.

அன்பானவர்களே!நமது இறைவன் அன்பே உருவானவர். ஆனாலும் அவர் நடுநிலை தவறாத நீதிபதி:நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன். தி.பா.7:11. பொல்லார் மனமாற்றம் அடையாவிடில் அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார். ஆனாலும் நமக்கு கருணைக் காட்ட ஆண்டவர் காத்திருக்கிறார். நமக்கு இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில், அவர் நீதியின் கடவுள்.அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெற்றோர் ஆவார்கள். எசாயா 30:18.

ஜெபம்

அன்பின் இறைவா!காலைதோறும் உமது கிருபைகள் புதியது. உமது இரக்கங்களுக்கு அளவே இல்லை.உமக்குமுன் நீதியுள்ள மனுஷர் யாரும் இல்லை. ஆகையால் நீர் எங்கள் பாவங்களை மன்னித்து உமது நீதியின்படி எங்களை உம்மோடு சேர்த்துக்கொள்ளும். நீர் கோபம் கொள்ளாதபடிக்கு வழியிலே உம்மை முத்தம் செய்து உமது அண்டை சேர்ந்துக்கொள்ள உதவி செய்யும்.உம்மையே பற்றிக்கொண்டு நற்பேறு பெற எங்களுக்கு போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்திலும், ஆட்டுக்குட்டியானவரின் நாமத்திலும் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அன்பின் தெய்வமே! ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.