கடவுளின் அன்பு அளவில்லாதது

கடவுள் மனிதர்களைப் படைத்தபோது, அவர்களுக்கான சுதந்திரத்தையும் கொடுத்தார். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுத்தார். கடவுள் ஒருபோதும், தனது எண்ணத்தை மனிதர்கள் மீது புகுத்தியது கிடையாது. அவர்களுக்கான சுதந்திரத்தில் எப்போதும் அவர் தலையிட்டதும் கிடையாது. ஆனால், மனிதன் எப்போதுமே, தனது சுதந்திரத்திரத்தைத் தவறாகத்தான் பயன்படுத்தியிருக்கிறான். பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த, மனித இனம் இன்னும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, அவர்களை எந்த தலைமுறையினருக்கு ஒப்பிடுவேன்? என்று ஆழ்ந்த அனுதாபத்தோடு பேசுகிறார். ஒவ்வொரு முறையும் அவர்கள் கடவுளின் திட்டத்திற்கு குறுக்கே நிற்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கடவுளின் அன்பையும், அவரது குரலையும் புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் கண்முன்னாலே, தான் அன்பு செய்கிறவர் தவறு செய்கிறபோது, தவறு என்று தெரிந்தும் அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறபோதுதான், அதன் வலி நமக்குத்தெரியும். கடவுளும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நிச்சயமாக இருப்பார்.

கடவுளின் அன்பை உணர்கிற எந்தவொரு மனிதனும், வாழ்வில் நடப்பவற்றை, நேர்மறையாகவே சிந்திப்பார். எந்தவொரு கடினமான நிகழ்வு நடந்தாலும், அதை பொறுமையோடு, கடவுள் நம்பிக்கையோடு எதிர்கொள்வார். அதுதான், கடவுள் மீது நாம் வைத்திருக்கிற முழுமையான அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பை நாம் கடவுள் மீது வைப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.