கடவுளின் அன்பு

இன்றைக்கு இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் பலபேர், கடவுளை பழிவாங்கக்கூடியவராக, கோபப்படக்கூடியவராக, இரக்கமில்லாதவராக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு உள்ள மனநிலை மட்டுமல்ல. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் மனநிலையும் கூட. தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சீடர்களுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது அவர்களை பழிவாங்கி, தங்களது ஆளுமையை நிலைநிறுத்த வேண்டும் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை தவறு என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

கடவுள் தன்னுடைய வல்லமையை, வலிமையை சாதாரண மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பதில்லை. அவர் அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அவர் மனிதர்கள் மட்டில் மிகப்பொறுமையோடு இருக்கிறார். கடவுள் எவ்வளவு தான் மனிதர்கள் மீது அன்பு வைத்திருந்தாலும், மனிதர்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக, கடவுள் அவர்கள் மீது கோபப்படவில்லை. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். அவர்கள் மீது கோபப்படும் தன்னுடைய சீடர்களை, அவர்களது செயல் தவறு என்பதை எடுத்துரைக்கிறார். காரணம், கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். எப்படி தன்னுடைய படைப்பான மனிதர்களை தான் அன்பு செய்வது தனது சுதந்திரமோ, அதேபோல அவர்கள் தன்னை அன்பு செய்வதும், சுதந்திர மனநிலையில் இருக்க வேண்டுமே தவிர, அது இறுக்கமான மனநிலையோடு கூடியதாக இருக்கக்கூடாது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார்.

கடவுளை அன்பு செய்வதற்கான சுதந்திரத்தை கடவுள் நமக்கு தந்திருக்கிறார். அவரது அன்பை முழுமையாக சுவைக்க, அவரைப்பற்றிக் கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. அதனை நாம் தான் சுவைக்க வேண்டும். சுதந்திர உணர்வோடு சுவைக்க வேண்டும். அதனை மட்டும் தான், கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.