கடவுளின் அருளை நம்புவோம்

பொறுமையோடு காத்திருத்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய விழுமியங்களில் ஒன்று. இந்த சிந்தனை நமது செப வாழ்வுக்கும் பொருந்தும். சீடர்கள் அதைத்தான் தங்களின் வாழ்வில் செய்கிறார்கள். இயேசு இறந்தபிறகு அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இயேசுவின் உடனடி இறப்பை எதிர்பார்க்கவும் இல்லை. இயேசு பல வேளைகளில் அதைச்சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் இயேசு இறப்பார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்று.

இயேசுவின் இறப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்னதாக அவர்களைப் பயம் ஆட்டிப்படைக்கிறது. இயேசுவிற்கு பிறகு தங்களின் வாழ்வு என்ன ஆகும்? என்கிற கேள்வி மனதை குடைகிறது. போக்கிடம் இல்லாமல் ஒரே .இடத்தில் அவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரேநாளில் தங்களின் வாழ்வு இப்படியாகிவிடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இயேசுவின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும், இனிமேல் நடந்தவைகளைப்பற்றி சிந்தித்து பயன் இல்லை. இனி நடப்பது நல்லவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வருகிறது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து, நிச்சயம் கடவுள் நமக்கு ஒரு வழியைக்காட்டுவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என, அவர்கள் அந்த அறையில் தங்கியிருக்கிறார்கள்.

பலவேளைகளில் நமது வாழ்வில நடக்கும் நிகழ்வுகளுக்கு பதில் தெரியாதபோது, நாம் எதிர்பார்க்காதவை நடக்கிறபோது, கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம். அந்த நம்பிக்கை நமக்கு பதில் கொடுக்கும். அந்த நம்பிக்கை நம்மை வழிநடத்தும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.