கடவுளின் அழைப்பு என்னும் கொடை

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது.

இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள், படிக்காதவர்கள், சாதாரணமானவர்கள் எப்படி, இறையாட்சியைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க முடியும்? அது எப்படி சாத்தியமாகும்? இங்கு தான் கடவுளின் அருட்கொடை வெளிப்படுகிறது. நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அந்த தகுதியைக் கொடுக்கிறவர் கடவுளாக இருக்கிறார். நல்ல மனது இருந்தால் போதும். அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நாம் பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதனுடைய பொருள் இதுதான். நமது மனது நன்றாக இருந்தாலே, நிச்சயம், கடவுளின் அருள் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

பலவேளைகளில் கடவுளின் பணியைச் செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களா? கடவுளின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியுமா? என்ற சந்தேகங்கள், உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு எழலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கடவுளின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டாலும், அந்த வல்லமைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.