கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம் விடுதலை பெற நமக்கு உதவியாக இருக்கும்.

மனிதர்கள் பலர், தாங்கள் தான், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம், தங்களது முயற்சியினால் தான், தாங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுதலையடைந்தோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. நாம் கேட்காவிட்டாலும், நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண, நமக்கு உதவி செய்யக்கூடியவர், நமது அன்பு ஆண்டவர். அவரது பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.