கடவுளின் கொடை

திருச்சபை என்றால் என்ன? திருச்சபையில் பேதுருவின் பணி என்ன? பேதுருவின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. எபேசியர் 2: 20 ல் பார்க்கிறோம்: ”திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்”. இங்கே திருச்சபையின் மூலைக்கல்லாக இயேசு சுட்டிக்காட்டப்படுகிறார். அவரில்லையென்றால், திருச்சபை உறுதியாக நிற்க முடியாது, என்று நாம் பொருள்படுத்தலாம்.

1பேதுரு 2: 5 ”நீங்கள் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக!” இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், திருச்சபையின் கற்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், திருச்சபை இல்லை. எனவே தான், சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, தானே துன்புறுத்தப்படுவதாக இயேசு அவரிடம் சொல்கிறார். 1கொரிந்தியர் 3: 11 ல் பார்க்கிறோம், ”ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது”. மேற்சொன்ன அனைத்துமே, இயேசுதான் திருச்சபையின் ஆணி வேர் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. அதாவது, இயேசு, பேதுருவின் மேல் திருச்சபையைக் கட்டுவேன் என்று சொன்னபோது, திருச்சபை பேதுருவைச்சார்ந்திருக்கிறது என்று பொருள்படுத்தவில்லை. ஏனெனில், திருச்சபை பாறை என்கிற ஆண்டவரில் அடித்தளம் பெற்றிருக்கிறது. பேதுருவில், திருச்சபை தொடங்கியதாக நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பேதுருவுக்கு அது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை. அதை யாரும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. அதை நாம் கேள்விக்குட்படுத்தவும் முடியாது.

கடவுள் தன் பணிக்காக மனிதர்களை அழைக்கிறபோது, தகுதியின் அடிப்படையில் பார்த்தால், யாரும் அழைக்கப்பட முடியாது. அவர்களுக்கு அந்த தகுதியை அவரே தருகிறார். கடவுள் அந்த தகுதியை அவருக்குத்தருகிறபோது, அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், கடவுளுக்கு மகிமை செலுத்துவது ஆகும்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.