கடவுளின் வரத்திற்காக காத்திருப்பது தவறா?

மத்தேயு 15:21-28

கடவுள் நல்லவர். நம்பிக்கையோடு நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு தரக்கூடியவர். ஒருசில நேரங்களில் நாம் கேட்ட மன்றாடடுக்கள் அனைத்தும் மிக விரைவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் காத்திருந்து தான் பெற வேண்டியிருக்கும். நம் அன்புக் கடவுள் நம்மை அதிகமாகவே அன்பு செய்கிறார். அவர் நமக்கு எதையும் தராமல் மறுப்பதில்லை. மாறாக வாரி வழங்கும் வள்ளல் அவர். ”பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்ற இந்த இறைவார்த்தைகள் அவரின் அதிகப்படியான அன்பை எடுத்துக்காட்டுகின்றன.

இதை உணராமல் நாம் பல வேளைகளில் அவசரப்படுகிறோம். நான் கேட்ட வரத்தை கடவுள் இன்னும் தரவில்லையே என்று மிகவே அவசரப்படுகிறோம். அப்படி அவரசப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

கானானியப் பெண் பேய் பிடித்திருந்த தன் மகள் குணம் பெற அவள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நமக்கு வியப்பைத் தருகின்றன.

  • தன் மகளுக்கு பேயிலிருந்து விடுதலை கிடைக்க கத்துகிறார். இயேசு விடுதலை தருவார் என நம்பிக்கையோடு கத்துகிறார். நம்பிக்கையோடு காத்திருக்கிறார்
  • இயேசுவிடம் இருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. நம்பிக்கையோடு காத்திருக்கிறார்
  • சீடர்கள் அவரை அனுப்பிவிடும் என்கிறார்கள். இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. நம்பிக்கையோடு காத்திருக்கிறார்
  • ஆண்டவர் இயேசு தன் வார்த்தையினால் நம்பிக்கையை சோத்தித்தறிகிறார். இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. நம்பிக்கையோடு காத்திருக்கிறார்
  • ஆண்டவர் இயேசு பாராட்டுகிறார். நம்பிக்கையோடு அவர் காத்திருந்ததை பாராட்டுகிறார். அவர் விரும்பியபடியே நிகழ்கிறது.

மனதில் கேட்க…

  • நான் ஏன் கடவுளின் வரத்திற்காக அவசரப்படுகிறேன்?
  • காத்திருந்து கடவுளிடம் வரம் பெற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றுக்கொள்வேனா?

மனதில் பதிக்க…
ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம் (புல 3:26)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.