கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை:

1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல்.

2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல்.

கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு.

ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை சேர்க்கலாம். வசதி, வாய்ப்புகளோடு வாழலாம். ஆடம்பரமாக இருக்கலாம். போலியான மதிப்பைப் பெறலாம். நம்மைச்சுற்றி, சில ஆட்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய மதிப்புமிகுந்த வாழ்வை நாம் இழந்து விடுகிறோம். ‘மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக்கிடைக்கும் பயன் என்ன? அற்ப கால மகிழ்ச்சிக்காக, நான் வாழ்வை இழக்கப்போகிறேனா? தன்னலம் மறந்து வாழப்போகிறேனா?

புனித தோமையார் கடவுளுக்கு உரியவற்றை தன் வாழ்வில் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையினால், நாம் அனைவருமே மீட்பு பெற்றிருக்கிறோம். அதுதான், அவருக்கு ஆனந்தம் தரக்கூடிய செய்தியாக இருந்தது. ஆக, கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்து, தன்னலம் மறந்து, நாம் சிலுவையைத் தூக்க தயாராக இருக்கும்போது, அது மற்றவர்களுக்கு மீட்பைக்கொடுக்கிறது. நமக்கு விண்ணரசில் இடம் கிடைக்கிறது.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.