கடவுளே அனைத்து உலகின் வேந்தர்

திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6
”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்”

கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார்.

கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய செயல்கள். மனிதர்களால் செய்ய முடியாது, மனிதர்களால் நடக்க முடியாத செயல்கள். மனிதர்களை விட வலிமையான கடவுளை அதுதான் இந்த உலகத்திற்கு கற்றுக்கொடுத்தது. இஸ்ரயேல் மக்களின் நிலை மற்ற நாட்டினர் அனைவர்க்குமே தெரியும். ஆனால், அப்படிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இந்த உலகத்தில் இவ்வளவுக்கு மதிப்பையும், மாண்பையும் பெற்றிருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அது கடவுளால் மட்டுமே முடிந்திருக்கும். அந்த கடவுள் நிச்சயமாக வலிமையான கடவுள் தான் என்பதை, பிறநாட்டினர் அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருந்தது.

கடவுள் இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். குறிப்பாக, அவர் சாதாரண மக்களின் பாதுகாவலராக இருக்கிறார். அந்த இறைவனிடத்தில் முழுமையாக நம்மை ஒப்படைப்போம். நிச்சயம் இறைவன் நமக்கு நிறைவான ஆசீரை வழங்குவார். வலுவற்றவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றிய இறைவன், நம்மையும் நிறைவாக ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.