கடவுளே! உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்

வேதனையில் மற்றவரின் உதவிக்காக காத்திருக்கும் ஓர் ஆன்மாவின் குரல் தான், இந்த திருப்பாடல். கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்று, அந்த நன்மைத்தனத்திற்கு உண்மையாக இல்லாமல், அவரை விட்டு விலகிச்சென்று, மீண்டும் வரவிரும்புகிற ஏக்கம் தான், இந்த பாடல். கடவுளின் அன்பை எப்படியெல்லாம் அனுபவித்தோம், என்பதை எண்ணிப்பார்த்து, அவற்றை நினைவூட்டி, மீண்டும் அத்தகைய அன்பைப் பெறுவதற்காக விரும்புகிற பாடல், இந்த பாடல் (திருப்பாடல் 80: 1, 2ஆ, 14 – 15, 17 – 18).

திராட்சைக்கொடி என்பது இஸ்ரயேலுக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆகும். இஸ்ரயேலை ஆண்டவர் தான், நட்டு வைத்தார். அவர் தான் பாதுகாத்தார். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்கு, ஓர் அடையாளத்தைக் கொடுத்தது ஆண்டவர் தான். இப்படி அடையாளத்தைப் பெற்ற இஸ்ரயேல், இப்போது அந்த அடையாளத்தை இழந்து இருக்கிறது. இழந்த அடையாளத்தை பெற விரும்புகிற முயற்சியாக, இறைவனை நோக்கி இந்த பாடல் பாடப்படுகிறது. இறைவன் நினைத்தால், மீண்டும் இழந்த அடையாளத்தைக் கொடுக்க முடியும் என்பது, திருப்பாடல் ஆசிரியரின் நம்பிக்கை. அதனை இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்வில் இறைவனோடு நெருங்கியிருப்பது தான், நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தருகிறது. இறைவனோடு இருப்பது நமக்கு நிறைவைத் தருகிறது. இறைவனின் ஆசீர்வாதம் நம்மோடு இருக்கிறபோது, நம்மால் எதையும் செய்ய முடியும் என்கிற உணர்வோடு, இந்த திருப்பாடலை தியானிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.