கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்

திருப்பாடல் 68: 9 – 10, 19 – 20
”கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்”

அனைத்து உலகின் அரசர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள், புகழுங்கள் என்கிற வார்த்தைகளை நாம் அடிக்கடி திருப்பாடலில் பார்க்கிறோம். ஆண்டவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்கிற சிந்தனைகள் எதற்காக மீண்டும், மீண்டும் தரப்படுகிறது? இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் மற்றவர்களைப் புகழ்கிறார்கள். உதாரணமாக, அரசியல் தலைவர்கள் பதவிக்காக, அதிகாரத்திற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்கிறார்கள். தங்களது மானத்தை விற்றாலும் பரவாயில்லை, பதவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எதிர்பார்ப்புக்களோடு புகழக்கூடியவர்கள் அதிகம். சாதாரண பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் மனிதர்களைப் புகழக்கூடிய பலபேர் கடவுளைப் புகழ்வதற்கு நேரமில்லை. இந்த மனநிலையிலிருந்து விடுவிக்கப்பெற்று, கடவுளைப் புகழ வேண்டும் என்பதே ஆசிரியரின் அறைகூலாக இருக்கிறது.

கடவுளைப் போற்றுவதும் புகழ்வதும் நமக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. அது எதையோ ஒன்றை எதிர்பார்ப்பது கிடையாது. கடவுள் நமக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற ஓர் உணர்வு. கடவுள் எப்போதும் நம் மேல் அன்பு வைத்திருக்கிறார். அவர் எப்போதும் நமக்கு உதவி செய்வதற்காக காத்திருக்கிறார். அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. நம்மை எந்நாளும் காக்கிறவராக இருக்கிறார். இவ்வளவு நன்மைகளைச் செய்யும் இறைவனை நாம் புகழ வேண்டும். அவரை முழு உள்ளத்தோடு போற்ற வேண்டும். அது தான் நமக்கு வாழ்க்கையில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர, மற்றவர்களைப் புகழ்ந்து பெறுகிற பட்டங்களோ, பதவிகளோ எப்போதும் நிறைவு தராது.

நமது வாழ்க்கையில் எப்போதும் கடவுளைப் போற்றுவதற்காக நாம் நேரத்தைச் செலவிட வேண்டும். கடவுள் நல்லவராக இருக்கிறார். நம் மீது நிரந்தரமான அன்பை கொண்டிருக்கிறார். அந்த கடவுளிடத்தில் நாம் எப்போதும் பாசமுள்ளவர்களாக, அவரைப்போற்றக்கூடியவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.