கடவுள் தமது பேரன்பால் நம்மை எதிர்கொள்ள வருவார்.தி.பா 59 : 10

துன்ப வேளைகளில் என்னை நோக்கி கூப்பிடுங்கள்: உங்களைத் காத்திடுவேன். நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். தி.பா 50 : 15. கடவுள் நம்மேல் வைத்த பேரன்பினால் நாம் எப்பொழுது கூப்பிட்டாலும் நம் முன் வந்து நிற்பார். நம்மூடைய உள்ளார்ந்த மனக்கண்களால் காண முடியும். அதற்காகவே இந்த உலகில் வந்து ஒரு மனிதனாக பிறந்து நம்மைப்போல் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து சென்றுள்ளார். அதனால் நம்முடைய எல்லா கஷ்டங்களையும், துன்பங்களையும், அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

அவருக்கேற்ற பலி நொறுங்குண்ட நெஞ்சமே: நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை அவமதிக்கமாட்டார். ஏனெனில் அவரே சோதனைக்குட்பட்டு துன்பப்பட்டதால் சோதிக்கப் படுவோருக்கு உதவிச் செய்ய அவர் வல்லவரும், நல்லவருமாயிருக்கிறார். எபிரெயர் 2:18. ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியும்:நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டு பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம் பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்று எரேமியா 15 :15 ல் வாசிப்பதுபோல நாமும் ஆண்டவரை நோக்கி மன்றாடினால் நம் ஜெபத்தைக் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் விலக்கி காத்திடுவார்.

அநேக நேரங்களில் நானும் பலவிதமான சோதனைகளின் நடுவே கடந்து சென்றுள்ளேன். எல்லோரும் இருந்தும் ஒரு அனாதைப்போல் இருந்துள்ளேன். அப்பொழுதெல்லாம் ஆண்டவர் நான் அநாதை இல்லை என்று நான் உணரும்படி செய்திருக்கிறார். எனக்கு உதவிய ஆண்டவர் உங்களுக்கும் உதவுவார்.அதற்கு நாம் செய்ய வேண்டிய காரியம் அவரையே நோக்கி கூப்பிட வேண்டும். உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கியவருமான ஆண்டவர் கூருவது இதுவே. என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவி சாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும்,மறைபொருள்களையும், உனக்கு நான் விளக்கிக் கூறுவேன் என்று எரேமியா 33:3ல்   சொல்லியிருக்கிறார்.

இத்தனை மகிமையும்,வல்லமையும் உடைய ஆண்டவர் நம்மோடு இருக்கும் பொழுது நாம் ஏன் கவலைப்படவேண்டும்.? பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்தினாலும், பலர் ஆணவத்துடன் நம்மை எதிர்த்தாலும்,அச்சம் நம்மை ஆட்கொள்ளாதபடிக்கு ஆண்டவரையே நம்புவோம். அவரின் வாக்கை புகழ்ந்து அவரை நம்பும் பொழுது எதற்கும் அஞ்ச தேவையில்லை.அற்ப மனிதர் நமக்கு என்ன செய்ய முடியும்?ஆண்டவருக்கு நன்றிபலி செலுத்தி அவர் பாதம் முத்தமிட்டு நம்முடைய எல்லாவிதமான ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதில் ஐயமுண்டோ!!

ஜெபம்

அன்பின் தெய்வமே! உமது பேரன்பால் எங்களை எதிர்கொள்ள வருபவரே! உம்மை போற்றுகிறோம், வாழ்த்துகிறோம். உண்மையிலேயே நேர்மையாளருக்கு கைம்மாறு உண்டு என்றும்,மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கிறீர் என்று நாங்கள் எங்கள் முழுமனதுடன் விசுவாசிக்கிறோம். உம்மையே நாடுகிறோம், உம்மீது தாகம் கொண்டுள்ளோம். நாங்கள் சோர்வுற்று கலங்கி தவிக்கும் நேரத்தில் நீரே எங்களை உமது கரத்தில் எடுத்து உமது சந்தோஷத்தாலும், சமானாத்தினாலும், நிரப்பி எங்களை ஆட்கொண்டு காத்திடும். நீரே எங்கள் புகலிடம்.உம்மிடத்தில் எங்களை அர்ப்பணிக்கிறோம். துதி,கனம்,மகிமை,யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள்
ஜீவனுள்ள தந்தையே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.