கடவுள் தாமே நீதிபதியாக வருகிறார்

திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தவர் மட்டும் அல்ல. அதனை பராமரிக்கிறவரும் கூட. இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கக்கூடியவரும் அவரே. கடவுள் இல்லையென்றால், பலருக்கு வாழ்க்கை நிச்சயம் கடுமையானதாகத்தான் இருந்திருக்கும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்து பலர், அதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அநீதி செய்வோர், தங்களது பலத்தால், அதிகாரத்தால் நேர்மையாளர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் ரூபா என்கிற கர்நாடாகாவைச் சேர்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்திருக்கிற அவலம் இந்த நாடறியும். இப்படி அநீதிகளுக்கு மத்தியில் நேர்மையாளர்கள் வாழ முடியுமா? என்றால், முடியும் என்பதை, இந்த பல்லவி வார்த்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

கடவுள் எப்போதும் நேர்மையாளர்களைக் காக்கின்றவராகவும், அநீதி செய்கிறவர்களை எதிர்த்து நிற்கிறவராகவும் இருக்கிறார். கடவுள் காலம் தாழ்த்தலாம். அது வெறுமனே காலம் தாழ்த்துவது அல்ல. மாறாக, அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு தருகிறார். இன்றைக்கு இருக்கிற நீதிமன்றங்கள் அனைத்துமே தண்டனை கொடுக்கிறது என்றால், அது தண்டனையாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது. தவறு செய்தவர் தன்னுடைய தவறுக்கு பிராயச்சித்தம் செய்து, திருந்தி வாழ்வதற்கு கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு. அதனை திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்களோ, கடவுளின் தண்டனையைப் பெற்றுவிடுகிறார்கள். நாம் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நிச்சயம் கொடுக்கப்படுகிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி நல்லவர்களாக, இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டுமென்றால், எப்போதும் நேர்மையாளர்களாக இருப்பதற்கு ஆசைப்பட வேண்டும். அதனால் வரக்கூடிய சவால்கள் ஏராளம் என்றாலும், அதில் கிடைக்கும் நிறைவு வேறு எங்கும் கிடைப்பது கிடையாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.