கடவுள் நம் அனைவரின் தந்தை

கிறிஸ்தவ அன்பில் நாம் வளர வேண்டும் என இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்தவ அன்பு என்றால் என்ன? இயேசு அன்பின் நிறைவிற்கு, முழுமைக்கு கடவுளை உதாரணமாகத் தருகிறார். கடவுள் நல்லவர், தீயவர் என்று பாராமல் அனைவர் மேலும், தனது கதிரவனைப் படரவிடுகிறார். அனைவருக்கும் மழை கிடைக்கச் செய்கிறார். ஒருவன் நல்லவன் என்பதனால் அவனுக்கு ஒன்றும், மற்றவன் கெட்டவன் என்பதால் அவனுக்கு ஒன்றும், கடவுள் செய்வதில்லை. அதுதான் அன்பின் நிறைவு. அந்த அன்பின் நிறைவு தான் கிறிஸ்தவ அன்பு.

ஏன் இந்த கிறிஸ்தவ அன்பு நமக்கு கட்டாயம் தேவை? இந்த கிறிஸ்தவ அன்பு நம்மில் இருக்கிறபோதுதான், நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிற தகுதியைப் பெறுகிறோம். கடவுளின் பிள்ளைகளாக, அவரின் உரிமைக்குடிமக்களாக நாம் மாற வேண்டுமென்றால், அதில் நாம் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இந்த கிறிஸ்தவ அன்பு என்பது, இதற்கு மேல் அன்பு என்ற ஒன்று இருக்க முடியாது, என்கிற உணர்வை நமக்குத்தருகிறது. நாம் படைக்கப்பட்ட நோக்கமும் இந்த அன்பில் நிலைத்து வாழ்வதற்காகத்தான். ஆக, கிறிஸ்தவ அன்பு என்பது, நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை, இது நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இன்றைக்கு, நாம் வாழக்கூடிய மனித சமுதாயம் வன்முறைகளால், வெறுப்பால், பகைமையுணர்வால் சிதைக்கப்பட்டு, சீரழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சரிசெய்ய அன்பு என்கிற அருமருந்தால் மட்டும் தான் முடியும் என்பது, இயேசுவின் போதனை. அதனையே நமக்கு வாழ்வாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனை நமது வாழ்விலும் வாழ, முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.