கடவுள் மீது நமது நம்பிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர். இரக்கமும், அன்பும் உருவான கடவுளால் நல்லவர்களையும், தீயவர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியும்? கடவுளின் மன்னிப்பு தீயவர்களைக் கரைசேர்த்து விடாதா? கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமா? அன்பே உருவான கடவுளிடமிருந்து, தீர்ப்பிடக்கூடிய நாள் எப்படி வர முடியும்? இதுபோன்ற கேள்விகளையும், வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் பலர். நல்ல எண்ணத்தோடு வாழ்கிறவர்களுக்கு இது சற்று நெருடலாகவும், தீமை செய்கிறவர்களுக்கு தொடர்ந்து அதனைச் செய்வதற்கு பக்கபலமாகவும் இருப்பது இதுபோன்ற வாதங்கள். அப்படியென்றால் கடவுளின் நீதி என்ன? என்று கேட்போர் பலர். இந்த கேள்விகளுக்கு நம்மால் தீர்வு காண முடியாது. ஏனென்றால், மனிதர்களாகிய நமது சிற்றறிவிற்கு இந்த கேள்விகளே அதிகமானதாக இருக்கிறது.

தீயவர்கள் தீயவர்களாகவே இருந்துவிட்டு செல்லட்டும். நல்லவர்கள் உறுதியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆவலாக இருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முரண்பாடுகளைக்க கண்டோ, நல்லவராக இருப்பதால் வரக்கூடிய தடைகளைக் கண்டோ, நாம் கலங்கிவிடக்கூடாது. மாறாக, விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும். தளர்ச்சியடையாத விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். இது சற்று கடினமானதுதான். ஆனால், அதுதான் நமக்கு பலன் தரக்கூடியது.

நமது வாழ்விலும் இத்தகைய கேள்விகள் எழுகிறபோது, நாம் எதற்கு கவலைப்படாமல் துணிவோடு கடவுள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையில் நிலைத்திருந்து வாழ அருள்வேண்டி, இந்த நாளில் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.