கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார்.

புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத் தருவார் என்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – என்று சொல்வார்கள். கடமையைச் செய்யாமல், நமக்கு வேண்டியதை குறுக்கு வழியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள். எப்போதும் நாம் நமது உழைப்பை நம்பி வாழ வேண்டிய அருளை கடவுளிடம் வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.