கட்டளைகளைக் கடைபிடிக்க

(யோவான் 3 : 16-21)

மொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார்? இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும்? என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது.

‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ 5:8) இறைவனுடன் முறிந்து போன நமது அன்பைப் புதுப்பிக்க அவரே முன்வந்தார். எலும்பு முறியாத ஆட்டுக் குட்டியாய் தன்னையே தகனப் பலியாக்கினார். நாமும் அவரது அன்புக்குப் பதிலன்பு காட்ட வேண்டும். அந்த அன்பு அவரது கட்டளைகளை செயல்படுத்துவதில் காட்டப்பட வேண்டும். “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் எனது கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்” என்பது இயேசுவின் வாக்கு (யோவான் 14:15)

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.