கட்டாயக் கல்வி: திரும்ப கிடைக்காது

லூக்கா 6:27-38

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் அனைத்தையும் செய்கிறோம். நாம் செய்கிற உதவி, நாம் காட்டுகிற அன்பு என அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் செய்கிறோம். திரும்ப கிடைக்காது என்று தெரிந்தால் நாம் திரும்ப திரும்ப பல முறை யோசிப்போம். அப்படி யோசிக்கும் நமக்கு மிகச் சிறந்த கட்டாயக் கல்வியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த கட்டாயக் கல்வி என்னவென்றால் நாம் செய்வது திரும்ப கிடைக்காது என்பதை புரிந்துக்கொள்வது தான்.

1. செய்ததை மறந்து விடு
பிறருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்வது பெருந்தன்மை. செய்த உதவிக்கு பதில் எதிர்பார்ப்பது சிறுந்தன்மை. ஆகவே செய்ததை மறப்பது சாலச்சிறந்தது.

2. செய்வதை நிறுத்தி விடாதே
நாம் செய்வதற்கு பலன் எதிர்பார்த்தால் நாம் செய்வதில் தடை வரும். ஆகவே பலன் எதிர்பாராமல் செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவருக்கு உதவி செய்வது கடவுள் நமக்கு கொடுத்த பாக்கியமாக எண்ணி கடந்து செல்ல வேண்டும். நல்லது செய்வதை, உதவி செய்வதை ஒருபோதும் நிறுத்தி விடக் கூடாது.

மனதில் கேட்க…
1. பலன் எதிர்பார்த்து உதவி செய்கிறவன் தானே நான்? நல்லதா இது?
2. இன்றைய நாளில் திரும்ப கிடைக்காது என்ற கட்டாயக்கல்வியை நான் கற்றேனா?

மனதில் பதிக்க…
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?(லூக் 6:34)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.