கண்ணின்மணிபோல் காக்கும் தெய்வம்

இயேசுவின் வார்த்தைகள் சீடர்கள் உள்ளத்தில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏதோ ஒரு சோகம் தங்களை ஆட்கொள்ளப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அது என்னவென்று அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் உள்ளங்களில் சோக ரேகை படர்ந்திருந்தது. இயேசு அவர்களின் உள்ளங்களை அறிந்தவராக, தனது போதனையைத்தொடங்குகிறார். அவருடைய போதனை அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.

தான் அவர்களிடமிருந்து பிரியப்போவதை பல நேரங்களில், அவர்கள் அறியும்வண்ணம் மறைபொருளாகச்சொன்ன இயேசு, இப்போது தனது பிரிவு தவிர்க்க முடியாது என்பதையும், ஆனால், அதைப்பற்றி அவர்கள் அஞ்சத்தேவையில்லை என்பதை, அவர்களுக்கு தூய ஆவியானவரைக்கொடுப்பதன் மூலம் சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் பிரிவைப்பற்றிக் கவலைகொள்ளக்கூடாது. இயேசு நம்மை தனியே விட்டுவிட்டுச் செல்கிறவர் அல்ல. இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும். எப்படியும் அவர் நம்மை ஏதாவது ஒருவகையில், பாதுகாத்துக்கொண்டே இருப்பார்.

இயேசுவின் பிரசன்னம் நம்மோடு ஏதாவது ஒருவகையில் இருந்துகொண்டே இருக்கும். அவர் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நம்மை எந்த ஆபத்தும் நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார். எனவே, அவரிடத்திலே முழுமையாக நம்பிக்கை வைத்து, அவரிடத்திலே சரணாகதி அடைவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.