கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்

திருப்பாடல் 126: 1ஆ – ஆ, 2இ – 3, 4 – 5, 6

இஸ்ரயேலின் ஆண்டவர் கண்ணீரைத் தரக்கூடிய இறைவன் அல்ல, மாறாக, கண்ணீரைத்துடைத்தெடுக்கிற இறைவன். எங்கெல்லாம் மானிட சமுதாயம் கண்ணீர் வடிக்கிறதோ, இறைவனிடம் முறையிடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் கண்ணீர் வடிக்கிறவரின் தகுதியைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார். மீட்பின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறபோது, இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

தொடக்கநூலில் காயினும் ஆபேலும் பலி செலுத்துகிறபோது, கடவுள் ஆபேலுடைய பலியை ஏற்றுக்கொள்கிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரனை கொன்றுவிடுகிறான். கடவுள் காயீனை தண்டிக்கிறார். ஆனால், காயீன் கடவுளிடத்தில் “என்னைப் பார்க்கிறவர் யாரும் கொன்றுவிட முடியுமே” என்று முறையிடுகிறான். தீங்கு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிற கடவுள், அவன் முறையிடுகிறபோது, அவனுக்கு ஓர் அடையாளமிட்டு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுளின் அருளைப்பெற தகுதி இல்லையென்றாலும், அவன் பாதுகாப்பு பெறுகிறான். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து, கண்ணீரோடு ஆண்டவரிடம் முறையிட்டபோது, அவர்கள விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இவ்வாறு கண்ணீரோடு ஆண்டவரிடம் முறையிட்டவர்கள், தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற தகுதியில்லையென்றாலும், தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பாடல் ஆசிரியர் சொல்ல வருகிற செய்தி, நாம் ஆண்டவரிடத்தில் முறையிடுகிறபோது, ஆண்டவரை நம்பி வருகிறபோது, நாம் அதற்கு தகுதியில்லை என்றாலும், கடவுள் தன்னுடைய பேராற்றலால், தாராள உள்ளத்தால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ அருள்புரிகிறார். அந்த ஆண்டவரின் ஆசீரை நாமும் நிறைவாகப் பெற்று வாழ, வரம் டவேண்டி மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.