கருணை உன் வடிவல்லவா !!!

அத்திமர உவமையில் இரண்டு கருத்துக்களை நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். 1. அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே அமைந்திருக்கிறது. திராட்சைத்தோட்டத்தின் மண் செழுமையான, வளமையான மண். தளிர்க்கவே தளிர்க்காது என்று நாம் நினைக்கிற ஒரு செடி கூட திராட்சைத்தோட்டத்தில் வைத்தால், தளிர்த்துவிடும். அந்த அளவுக்கு வாழ்வு தரக்கூடிய மண், திராட்சைத்தோட்ட மண். 2. அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. ஓர் அத்திமரம் காய்த்து கனி தர அதிகபட்சம் எடுக்கக்கூடிய ஆண்டுகள் மூன்று ஆண்டுகள். ஓர் அத்திமரம் வைத்த முதல் இரண்டாவது ஆண்டிலே கனி தர ஆரம்பித்துவிடும். ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்தும் கனி தரவில்லையென்றால், அந்த அத்திமரம் கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை.

இங்கே இந்த அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது செழுமையான, வளமையான பகுதியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. இனிமேல் அது கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி கனி தருவதற்கு வாய்ப்பே இல்லாத அந்தச் சூழ்நிலையிலும், தோட்டக்காரர் இன்னும் ஓராண்டு காத்திருக்க தன் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். மனம் திருந்தவே மாட்டான் என்று மற்றவர்களால் முத்திரைக்குத்தப்பட்டவர்களுக்கும் கடவுள் கனிவோடு காத்திருக்கிறார். இது கடவுளின் கருணையையை, இரக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பார்வைகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வையும் வேறுபாட்டான பார்வையோடு பார்க்கிறோம். இந்த வரிசையில், கடவுளைப்பற்றி நமது பார்வையும் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறது. கடவுளை நாம் எப்படிப்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்பதை இயேசு நமக்கு சுட்டிக்காட்டுகிறார். கடவுளை வெறுமனே கண்டிக்கிறவராக மட்டும் இல்லாமல், கருணைமிகுந்தவராகவும், இரக்கமுள்ளவராகவும் நாம் பார்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.