கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களை காப்பார்

இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான் கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து,அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.

அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக்கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் .

ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட நாம் ஒவ்வொருவரும் தூய்மையாக்கப்பட்டு பரிசுத்தவான்களாய் வாழ
லாம் என்று ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். தன் பாவங்களை மறைக்கிறவனே வாழ்வடைய மாட்டான். அவைகளை ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிடுபவனோ அவரால் மன்னிப்பு பெற்று இரக்கம் பெறுவான். இதை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் அவருக்கேற்ற பிள்ளைகளாய் உங்களை மாற்றி அவர் விரும்பும் காரியங்களை செய்து அவரின் நற்செய்தியை உலகுக்கு அறிவித்து பரிசுத்தவான்களின் இடத்தை நிரப்பி அவரின் சாயலை பெற்றுக்கொள்ளுங்கள்.

அப்பொழுது ஆண்டவர் நம்முடைய பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு தமது தேவதூதர்களை அனுப்பி காப்பாற்றுவார். ஆண்டவர் உங்களைத் தேடி வந்து உங்களுக்கு உதவி செய்வார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஓன்று தான்.முதலாவது அவருடைய நீதியை நாம் தேடினோமானால் மற்ற எல்லாவற்றையும் நமக்கு அவர் அருள்புரிவார். அவரைத் தேடினால் கண்டடைவோம். தட்டினால் திறக்கப்படும். ஆகையால்தான் தாவீது சொல்கிறார் இரவும்,பகலும் அவருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான். நாம் ஒவ்வொருவரும் அந்த பாக்கியத்தை பெற்று அவரின் கோபத்துக்கு தப்பி நடந்து அவரோடு கூட ஆளுகை செய்யும்படி அவர் பாதத்தில் நம்மை ஒப்புகொடுத்து தாழ்த்தி பணிவோம்.

அன்பின் தத்ரூபமே!உம்மை போற்றுகிறோம், உம்மையே ஆராதிக்கிறோம். உமது பாதுகாப்பில் வாழ்பவர் உமது நிழலில் தங்கியிருப்பார். நீரே எங்கள் புகலிடமும், அரணும் கோட்டையும், நாங்கள் நம்பியிருக்கிற எங்கள் இறைவன் ஆனவர். எங்களை வேடரின் கண்ணியிலிருந்தும் கொள்ளை நோயின்றும் காப்பவர் நீரே. உமது சிறகுகளால் எங்களை மூடி பாதுகாத்து அரவணைத்துக்கொள்ளும். நாங்கள் நீர் விரும்பும் செயல்களை மாத்திரம் செய்து உமக்கு மகிமை சேர்க்க உதவி செய்யும். எங்கள் பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு எல்லாத் தீமைக்கும் விலக்கி காத்தருளும். உமது இரத்தத்தால் கழுவப்பட்ட நாங்களும் பரிசுத்தவான்களாய் இருந்து உமது நற்செய்தியை பிறர்க்கு அறிவித்து உம்மிடத்தில் அடைக்கலமாய் கொண்டு வந்து சேர கிருபை அளித்தருளும். எல்லா துதி, கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே உண்டாகட்டும்.

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.