கறைபடாத வாழ்வு வாழ்வோம்

தன் சகோதரரையோ, சகோதரியையோ ”அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். எரிநரகம் என்பதன் பொருள் என்ன? யூதர்களுக்கு மத்தியில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இது யெருசலேமின் தென்மேற்கில் இருக்கக்கூடிய, பென் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இங்குதான் ஆகாஸ் மன்னன் பாகால் தெய்வங்களுக்கு வார்ப்புச்சிலைகளைச் செய்தான். இந்த பள்ளத்தாக்கில், அந்த தெய்வங்களுக்கு தூபம் காட்டினான். ஆண்டவர் முன்னிலையில் அருவருக்கத்தக்கவகையில், தனது புதல்வர்களையே தீயிலிட்டு எரித்தான். (2குறிப்பேடு 28: 1 – 4)

ஆகாசிற்கு பிறகு வந்த, யோசியா அரசர் இதை அடியோடு அழித்தார். பாகால் தெய்வமான மோலேக்கு சிலைக்கு யாரும் தங்கள் புதல்வர்களை பலியிடாதவாறு, அதை அப்புறப்படுத்தினான். அனைத்தையும் தகர்த்தெறிந்தார். பீடங்களை உடைத்து, மனித எலும்புகளால் நிரப்பினார். இவ்வாறாக, அந்த இடமே மாசுபட்ட இடமாக, மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக, அருவருக்கத்தக்க இடமாக மாற்றப்பட்டது. (2 அரசர்கள் 23: 10 முதல்). இந்த இடம் அணையாத நெருப்பாகவும், கொடுமையானதாகவும் கருதப்பட்டது. ”அறிவிலியே” என்கிற வார்த்தை, அறிவில்லாத தன்மையை அல்ல, மாறாக, மற்றவர்களின் ஒழுக்கக்கேடான வாழ்வையும், அவமதிப்பையும் குறிக்கக்கூடிய சொல். மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதும், அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றிப் பேசுவதும், நரகத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய வார்த்தைகள் ஆகும்.

நாம் எப்போதும் கடவுள் முன்னிலையில் மாசற்றவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். அதற்கு நம்மை கறைப்படுத்தும் செயல்களிலிருந்து, வார்த்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை கறைபடுத்தும் எதுவும், நம்மை கறைபடுத்துவதாக அமையும். அதற்கேற்ப நமது வாழ்வை, தூய்மையான வாழ்வாக மாற்றிக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.