கள்ளங்கபடற்ற வாழ்வு

இன்றைக்கு தாய்த்திருச்சபை திருத்தூதர்களுள் ஒருவரான பர்த்திலேமேயுவின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவருடைய இயற்பெயர் நத்தனியேலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் பர்த்திலேமேயு என்று அழைக்கப்படுவதற்கு, இவர் தால்மேயுவின் மகன் என்பதான அர்த்தம் காரணமாகும். தால்மேயு என்பவன் கி.மு.10ம் நூற்றாண்டின் ஜெஸ்ஸே என்கிற பகுதிக்கு அரசனாவான். அவரது மகளை பேரரசர் மணந்திருந்தார். எனவே, பர்த்திலேமேயு அரசர் வழிவந்த குடும்பம் என்பதற்கு, நற்செய்தியாளர்கள் இந்த பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது, விவிலிய அறிஞர்களின் கருத்து. இவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதும், நமக்கு கொடுக்கப்படுகிற ஊகச்செய்தி.

இவரை இயேசு கள்ளம், கபடற்றவர் என்று சொல்வதிலிருந்து, இவரை இயேசு எந்த அளவுக்கு அறிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பர்த்திமேலேயு-க்கு மிகப்பெரிய ஆச்சரியம். அதேவேளையில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும். காரணம், தான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை, இந்த உலகம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும், இயேசு அவரை அங்கீகரித்திருக்கிறார் என்பது, நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கும். இன்னும் அதே போலான வாழ்வை வாழ்வதற்கு, அவருக்கு ஊக்கமாக இருந்திருக்கும். கள்ளம், கபடற்ற வாழ்வை வாழ்வது எளிதானதல்ல. இந்த உலகம் நம்மை பயன்படுத்தி, வெகு எளிதாக பழிகூறக்கூடிய வாழ்வு. ஆனாலும், எதையும் கண்டுகொள்ளாமல் கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற திருத்தூதரின் வாழ்க்கை, உண்மையிலே நமக்கெல்லாம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வாழ்வை நாம் கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழ வேண்டும். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நினைக்காமல், கடவுளுக்கு உண்மையாக, நமது மனச்சான்றிற்கு முரண்பாடில்லாமல், ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய வரத்தை, ஆண்டவரிடத்தில் கேட்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.