கீழ்ப்படிதல்

தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். அவர்களை தனது சாயலில், உருவத்தில் படைத்தார். இவ்வாறு தனது அன்புக்குரியவர்களாக, அவருடைய பிள்ளைகளாக மனிதர்களைப் பேணிக்காத்தார். ஆனால், மனிதன் கடவுளை மிஞ்சிவிட வேண்டும் என்கிற, அலகையின் கண்ணியில் சிக்கி, அந்த உறவை இழந்துவிடுகிறான். இவ்வாறு கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பெற்ற மனிதன் கீழ்ப்படியாமையால், கடவுளின் வார்த்தையைப் புறந்தள்ளியதால், அந்த உறவை இழந்துவிடுகிறான்.

இன்றைய நற்செய்தி, மனிதன் இழந்த உறவை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையைத் தருகிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே, அந்த ஆலோசனை. கீழ்ப்படியாமை தான், உறவைச் சிதைக்கிறது. கீழ்ப்படிதல் உறவை ஆழப்படுத்துகிறது. முதல் மனிதன் ஆதாம் கீழ்ப்படியாமையால் துன்பத்தை வருவித்துக்கொள்கிறான். கடவுளின் மகன் இயேசுவோ, தனது கீழ்ப்படிதல் மூலமாக இழந்த உறவை புதுப்பித்து ஆழப்படுத்துகிறார். நம்மையும் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும், உறவை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். கடவுளோடு நாம் மீண்டும் இழந்த உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும். எப்போது நாம் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கிறோமோ, அந்த நிமிடமே நாம் இழந்த உறவை புதுப்பித்துக் கொள்கிறோம்.

நமது வாழ்வில் நமது கீழ்ப்படியாமையினால் கடவுளோடு உள்ள உறவை, நாமும் சிதைத்திருக்கிறோம். அந்த உறவை நமது கீழ்ப்படிதல் மூலமாக ஆழப்படுத்துவோம். அவருடைய குரலைக் கேட்போம். அதற்கு செவிகொடுப்போம். இயேசுவின் பிள்ளைகளாக மாறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.