கீழ்ப்படிதல்

யூதர்கள் இயேசுவிடம், ”நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்” என்று சொல்கிறார்கள். இயேசு தனது சொல்லாற்றலின் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கை முறையினாலும், நடத்தையினாலும், ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல என்பதை, தெளிவாக அவர்களுக்கு உரைத்துவிட்டார். உடனே யூதர்கள், அடுத்ததாக, தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்று விவாதம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இயேசு அதனையும் உடைத்தெறிகிறார். அதனைத்தான். இந்த நற்செய்தியின் கடைசிப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

விடுதலைப்பயணம் 4: 22 ”இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை”. இவ்வாறு கடவுள் இஸ்ரயேலை தனது முதல் பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் கீழ்ப்படியாமையோடு பாலைவனத்தில் மோசேயோடு சண்டையிடுகிறார்கள். அப்போது மோசே அவர்களிடம் சொல்கிறார்: ”ஞானமற்ற மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறும் இதுதானா? உங்களைப் படைத்து உருவாக்கி நிலைநிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? இவ்வாறு இஸ்ரயேலை தனது பிள்ளையாக கருதிய இறைவனை, இஸ்ரயேல் மக்கள் வேற்று நாட்டினரோடு தொடர்பு வைத்து, அவர்களது தெய்வங்களையும் வணங்கி, இறைவனுக்கு பிரமாணிக்கமில்லாமல் வாழ்ந்தனர். அந்த கீழ்ப்படியாமையை, பிரமாணிக்கமின்மையை இயேசு சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரிக்கிறார்.

இன்றைக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனமாக பார்க்கப்படுகிறது. கீழ்ப்படிதல் என்பது மிகப்பெரிய பண்பு. அதனை சரியான பார்வையோடு பார்க்கிறபோது, அது இறைவனின் அளவுகடந்த, அருளை நமக்குப் பெற்றுத்தருகிறது. அதேபோல மனிதர்களிடையே, கணவன், மனைவி உறவிலும், பிரமாணிக்கம் என்கிற வார்த்தையின் உன்னதம் மறைந்து கொண்டேயிருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.