குயவனும், மண்பானையும்

எரேமியா 18: 1 – 6

இறைவன் உருவகங்கள் வழியாக, தன்னுடைய செய்தியை, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியை, இறைவாக்கினர் வழியாக அறிவிப்பதை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம். குயவன், மண்பானை உருவகத்தை இறைவன் பயன்படுத்துகிறார். குயவன் மண்பானை செய்கிறான். அந்த மண்பானை என்பது, குயவனின் உருவாக்கத்தில் விளைந்தது. தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, தான் எண்ணியவற்றை, மண்பானையாக குயவன் வடிக்கிறான். அவர் செய்ய விரும்புவதையெல்லாம், அந்த மண்பானை செய்வதில் அவர் செய்து கொள்ளலாம். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிப்பதற்காகச் சொல்லப்படுகிறது.

கடவுள் அவர்களுக்குச் சொல்கிற செய்தி இதுதான்: ஒரு நாட்டையோ, அரசையோ எப்போது வேண்டுமானாலும் பிடுங்கி எறிவதற்கு கடவுளுக்கு ஆற்றல் இருக்கிறது. ஏனென்றால், அவர் இந்த உலகத்தைப் படைத்து பராமரிக்கிறவர். அதேவேளையில், சொல்லப்படுகிற செய்தியைக் கேட்டு, அவர்கள் தங்கள் தீய வழிகளிலிருந்து விலகி, தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வாரென்றால், நிச்சயம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். எல்லாமே கடவுளின் கையில் இருந்தாலும் கூட, கடவுள் அவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். அவர்களின் தவறான வழிகளிலிருந்து மீண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறார். அதைத்தான் இங்கே அவர் உருவகத்தின் வழியாக வெளிப்படுத்துகிறார்.

கடவுள் நம்மை அழிந்து போக வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறவர் கிடையாது. நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அதேவேளையில், நாம் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தால், நாம் திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறார். அதிலும் நாம் திருந்தவில்லை என்றால், நமக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறோம். கடவுள் கொடுக்கிற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நல்ல முறையில் வாழ கற்றுக்கொள்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.