குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்

திருப்பாடல் 103: 1 – 2, 11 – 12, 19 – 20
”குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்”

மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். அந்த பலவீனம் தான், தான் தவறு செய்வதை ஏற்றுக்கொள்ளவும், அடுத்தவர் தவறு செய்வதைக் கண்டு மனம் புழுங்கவும் செய்கிறது. ஆனால், கடவுள் பலமுள்ளவர். அவர் எந்நாளும் நம்மை மன்னிக்கிறவராக இருக்கிறார் என்பதை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பலமுள்ளவராக இருப்பதனால் தான், நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அதனைப் பொறுத்து, நம்முடைய குற்றங்களை மன்னித்து, நமக்கு விடுதலையை வழங்குகிறவராக இருக்கிறார்.

கடவுளின் கருணையை, மன்னிக்கும் பேரன்பை உருவகம் மூலமாக ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். கிழக்கும், மேற்கும் திசைகளைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. கிழக்கு நோக்கிச் சென்றால், நாம் மேற்குத்திசையை கற்பனை செய்து பார்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறு துருவங்களைச் சார்ந்தவை. இரண்டும் சேருவது முடியாத காரியம். அதேபோலத்தான் கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிக்கக்கூடிய விதமும். அவர் எந்தளவுக்கு நம்முடைய குற்றங்களை மன்னிக்கிறார் என்றால், அதனை முழுவதும் மறந்துவிடும் அளவுக்கு, அடுத்த நேரத்தில் அது தெரியாத அளவிற்கு மறந்துவிடுகிறார்.

கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் முழுமையாகச் சுவைத்துக் கொண்டிருக்கிற நாம், எந்நாளும் அவருடைய அன்பை, முழுமையாகச் சுவைப்பதற்கு முயற்சி எடுப்போம். அவரிடத்தில் திரும்பி, திருந்தி வாழ முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.