சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை இல்லாத உலகமடா – என்று ஒரு பாடல் வரிகளில் வார்த்தைகள் வரும். இந்த உலகத்தில் நாம் இழந்துவிட்ட முக்கியமான மதிப்பீடு இந்த சகிப்புத்தன்மை. நமது முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். கூட்டுக்குடும்பமாக வாழ்வது என்பது எளிதான காரியம். இன்றைய நடைமுறையில் அது சாத்தியப்படாத ஒன்று. ஆனால், வாழமுடியாத ஒன்றல்ல. குடும்பங்கள் சேர்ந்திருப்பது மிகப்பெரிய பலம். அதில் கிடைக்கக்கூடிய நிறைவும் பெரிது. கூட்டுக்குடும்பம் வெற்றிபெற, சகிப்புத்தன்மை மிக, மிக அவசியம். அந்த சகிப்புத்தன்மை தான், வெற்றியின் திறவுகோலாக இருந்தது.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால், சீடர்கள் அந்த நகரங்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு கோபமாக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்கிறார். வாழ்வின் பலகட்டங்களில் நாம் பொறுமையோடு வாழ்கிறபோதுதான், சகிப்புத்தன்மையோடு வாழ்கிறபோதுதான், நாம் வெற்றிபெற முடியும் என்பதை, இயேசு தனது வாழ்வால் சீடர்களுக்கு புரியவைக்கிறார். இன்றைய காலகட்டத்தில், சகிப்புத்தன்மை தவறான வழியில் புரிந்து கொள்ளப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, சங்கடங்களை அனுசரித்து வாழப்பழகிக்கொள்வது. மற்றவர்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப, நம்மை மாற்றிக்கொள்வது. இது அடிமைத்தனம் அல்ல, மாறாக, உறவைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு பாலம்.

இன்றைக்கு, திருமண உறவுகள் விரைவில் முறிந்து போவதற்கு, சகிப்புத்தன்மையற்ற மனநிலை தான் காரணம். யார் பொறுத்து போக வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையும், யார் பெரியவர்? என்கிற ஆதிக்க மனப்பான்மையும், சகிப்புத்தன்மையை நீர்த்துப்போகச் செய்கிறது. அதுதான் வாழ்வின் தோல்விகளுக்கும் காரணமாகிறது. நமது வாழ்வில் நாம் வெற்றிபெற, உறுதியான உள்ளத்தோடு, நாம் பொறுமையாக வாழ்வை அணுகுவோம். சகிப்புத்தன்மை என்கிற உன்னதமான பண்பை, பேணிவளர்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.