சாதாரணமானது ஆனால் வரலாறானது

புனிதர் அனைவர் பெருவிழா
மத்தேயு 5:1-12

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக!

மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய வருக! வருக! என அழைக்கிறது. அதற்கு இரண்டு யோசனைகளையும் வழங்குகிறது.

1. சாதாரணமானது
புனிதர்கள், நம்மைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடக்கம், ஒரு முடிவு இருக்கிறது. இவர்களுக்கென்று உடல் இருக்கிறது. உறவுகள் உள்ளன. ஊர் இருக்கிறது. இவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வில், அந்த வாழ்வுச் சூழலில் இவர்கள் உன்னதமான மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும். ஆகவே ஒவ்வொரு நாளும் கவனமாய் புனித வாழ்வு நடத்துவோம். புனிதர்களாய் கவனமாய் செயல்படுவோம்.

2. வரலாறானது
புனிதர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. வாழ்வில் அவர்கள் எடுத்த முடிவிலிருந்து திரும்பிச் செல்லவில்லை. எந்தப் பிரச்சனை வந்தாலும், எந்த இடர் வந்தாலும் அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். மனிதத்தை புனிதத்தால் வென்றனர். ஆகவே அவர்கள் வெற்றி கண்டனர். அவர்கள் வாழ்வு இப்போது நமக்கு வரலாறானது. சாதாரண வாழ்வு மிகப்பெரிய வரலாறாக உருவெடுத்திருக்கிறது. நாமும் சாதாரணதை சரித்திரமாக மாற்றுவோம். வரலாறு படைப்போம்.

மனதில் கேட்க…
1. புனிதராக மாற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறதா? அதற்கான முயற்சிகளை நான் எடுத்ததுண்டா?
2. என்னுடைய சாதாரண பிறப்பை ஒரு வரலாறாக மாற்றலமா?

மனதில் பதிக்க…
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்கு கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்(மத் 5:12)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.