சுயநலம் அகற்றுவோம்

சதுசேயர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தனர். யாரையும் மதிக்காதவர்களாகவும், தங்களுக்கே உரித்தான் கர்வத்தோடு வாழ்ந்து வந்தனர். இது வெளியாட்களுக்கு மட்டுமல்ல, மற்ற சதுசேயரோடு கூட அவர்கள் இப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தனர். அவர்கள் எப்போதும் தங்களது நலன் தேடுகிறவர்களாகவும், தங்களது நிலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் தங்களின் அன்றாட வாழ்வை அமைத்துக்கொண்டனர். அவர்களின் முரட்டுத்தனத்திற்கு தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் சிறந்த எடுத்துக்காட்டு.

இயேசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதால், இவர்களுக்கு என்ன இழப்பு? என்ற கேள்வி நிச்சயம் நமக்குள்ளாக எழும். மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த நிலையை அவர்களை ஆளுகின்ற உரோமையர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இந்தச்சூழ்நிலை உரோமையர்களின் கைப்பாவைகளாக இருக்கிற இந்த தலைமைச்சங்கத்தின் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் முடிவு கட்டுவதாக அமைந்து விடும். எங்கே தங்களின் சொகுசு வாழ்க்கை இயேசுவின் பெயரால், அழிந்துவிடுமோ? என்கிற எண்ணம் தான், எப்படியாவது இயேசுவைத்தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள்ளாக உருவாக்கியது.

இன்றைக்கு நாமும் கூட நமது வாழ்க்கையின் நிகழ்வுகளை நம்மை மையப்படுத்தியே சிந்திக்கிறோம். இந்த உலகமும், அதனில் இருக்கிற ஒவ்வொன்றும் நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். நமக்கு எந்த பாதிப்பும், பங்கமும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம். நமது நிலையிலிருந்து, பொது நிலைக்கு வந்து நம்மையே மாற்றுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.