செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார்.

இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து செல்கிறார். நிச்சயம் அவர் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயிருக்க வேண்டும். ஆனாலும், அடுத்த நாள் காலையிலே, மக்கள் ஏராளனமான பேர் கூடியிருக்க அவர்களுக்கு, மகிழ்ச்சியோடு போதிக்கிறார். இடையில் அவர் பலம் பெற்றது, விழித்திருந்து செபித்த அந்த வல்லமையினால் தான்.

இன்றைக்கு செபத்திற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. திருப்பலிக்கு முன்னால் செபிக்கப்படும் செபத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணமே மறைந்து விட்டது. குடும்ப செபமே சிந்தனையில் இல்லாமல் மங்கிவிட்டது. அதனால் தான், தற்கொலைகளும், கோழைத்தனங்களும் அதிகமாகிவிட்டன. செபத்திற்கு நமது வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். செபத்தை நமது வாழ்வு மையப்படுத்தியதாக இருக்கட்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.