செல்வத்தினால் வரும் கேடு

இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஓர் ஊரில் சண்டையோ, வாக்குவாதமோ வந்தால், அவர்கள் உடனே, ஊரிலிருக்கக்கூடிய பெரிய மனிதர்களிடம் முறையிடுவார்கள். அதுபோல, பொதுவாக பாலஸ்தீனத்திலே போதகர்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஏதாவது பிரச்சனை என்றால், போதகர்களிடம் சென்று, பிரச்சனையைத் தெரிவித்து, தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வார்கள். அதுபோன்று தான், இயேசுவிடமும் ஒரு மனிதர் வருகிறார்.

இயேசு அந்த மனிதனின் தேவையில்லாத பிரச்சனையைத் தீர்ப்பது தனது பணி அல்ல என்பதைத் தெரிவித்தாலும், அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருக்கிறவர்களுக்கு செல்வத்தினால் விளைகின்ற, கடுமையான விளைவுகளை எடுத்துரைக்கின்றார். செல்வம், அந்த செல்வந்தனை இந்த உலகத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. இந்த உலகத்தைத் தாண்டி அவன் சிந்திக்கவும் இல்லை. அப்படி ஓர் உலகம் இருப்பது, அவனது எண்ணத்திற்கு வரவும் இல்லை. அவனுடைய சிந்தனை, எண்ணம் முழுவதும் இந்த உலகம் சார்ந்ததாக இருக்கிறது. அதைத்தாண்டி, அவனால் சிந்திக்க முடியாததற்கு காரணம், அவன் சேர்த்து வைத்திருந்த செல்வம். கடல் தண்ணீரை எவ்வளவுக்கு குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு நமக்கு தாகம் எடுக்கும். அதேபோல, செல்வத்தை எந்த அளவுக்கு சேர்க்கிறோமோ, மீண்டும், மீண்டும் நமக்கு சேர்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

நமது வாழ்க்கையில் செல்வத்தைத் தேடுகிறபோது, செல்வத்தை தாண்டி, நம்மால் சிந்திக்க முடியாது என்பது, இன்றைய அறிவற்ற செல்வந்தர் உவமை, சிறந்த பாடம். செல்வம் நமக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அது முதன்மையானது அல்ல. நாம் வாழ்வதற்கான ஓர் உதவும் காரணி. அவ்வளவுதான். அந்த மனநிலை நமக்கு வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.