தங்களை விடுவித்த இறைவனை மறந்தார்கள்

திருப்பாடல் 106: 6 – 7b, 13 – 14, 21 – 22, 23

”திரும்பிப்பார்த்தல்” என்பது வெற்றிக்கான ஆரம்பப்புள்ளி என்பார்கள். திரும்பிப்பார்ப்பது என்பது நம்முடைய வாழ்வை நாம் சீர்தூக்கிப்பார்ப்பது என்கிற பொருளாகும். ஒவ்வொருநாளும் நம்முடைய வாழ்வை நாம் திரும்பிப்பார்க்கிறபோது, அது நமக்குள்ளாக பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எந்த இடத்தில் நாம் தவறியிருக்கிறோம், எந்த இடத்தில் நாம் சரி செய்ய வேண்டும்? எவையெல்லாம் நம்முடைய பலமாக இருக்கிறது என்பதை, நமக்குக் கற்றுக்கொடுப்பதாக இது அமைந்திருக்கிறது.

இன்றைய திருப்பாடலில், இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த வியத்தகு செயல்களையும், அதற்கு முரணாக, நன்றியில்லாதத் தன்மையோடு இஸ்ரயேல் மக்களின் பதில்மொழிகளையும், ஆசிரியர் எடுத்துரைக்கிறார். எகிப்தில் இஸ்ரயேல் மக்களுக்கு பல அற்புதச்செயல்களைச் செய்து, இறுகிய மனதுடைய பார்வோன் மன்னரிடமிருந்து, அவர்களை விடுவித்தார். ஆனால், இறைவன் செய்த நன்மைகளையெல்லாம் பாராமல், இறைவனை விட்டு, இஸ்ரயேல் மக்கள் விலக ஆரம்பித்தனர். இந்த செயல்களையெல்லாம் திருப்பாடல் ஆசிரியர் திரும்பிப்பார்ப்பது, அவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக. தங்களது தவறான வழிகளைவிட்டு, சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக. இந்த “திரும்பிப்பார்த்தல்” நிச்சயம் இஸ்ரயேல் மக்கள் கடவுள்பக்கம் திரும்பி வருவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

நம்முடைய வாழ்விலும் நாம் ஒவ்வொருநாளும் நம்முடைய தனிப்பட்ட வாழ்வை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவற்றில் மாற்றம் ஏற்படுத்துகிற காரியங்களில் முழுமையாக ஈடுபட வேண்டும். அந்த ஈடுபாடு நிச்சயம் நம்மை நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உதவியாக அமையும் என்பதல் சந்தேகம் இருக்க முடியாது.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.