தயங்கினால் தடுமாற்றம் தான்…

லூக்கா 14:15-24

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கடவுள் நாம் புனிதத்தில் வளர நமக்கு அனுதினமும் அழைப்பிதழ் கொடுக்கிறார். அவரோடு நாம் நெருங்கி வர வேண்டும் என்பதே அந்த அழைப்பிதழின் நோக்கம். யார் அழைப்பிதழை ஏற்று அவருடன் நெருங்கி வாழ்கிறார்களோ அவர்களுக்கு பெரிய ஆசீர்வாதங்களான மகிழ்ச்சி, மனநிறைவு, சமாதானம், நல்ல ஆரோக்கியம் இவையனைத்தையும் இறைவன் இலவசமாக வழங்குகிறார். யார் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்களோ அவர்கள் தடுமாறுகிறார்கள். இரண்டு விதங்களில் தடுமாற்றம் நிகழ்கிறது.

1. இலக்கில் தடுமாற்றம்
கடவுளின் அழைப்பை ஏற்காதவர் வாழ்க்கையானது இலக்கே இல்லாமல் ஒவ்வொரு நாளும் துவங்கும். குடிகாரன் போன்று தடுமாறுவர். எதையும் குறிப்பிடும் வகையில் இவர்கள் சாதிப்பதில்லை. தோல்வி ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக காத்துக்கிடக்கும். பின்னடைவுகள் பின்தொடரும்.

2. இருத்தலில் தடுமாற்றம்
வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக விரக்திகள் வருவதால் நான் வாழந்து என்ன பயன் என்ற தாழ்வுமனப்பான்மை மிக வேகமாக வரும். ஆகவே சோகங்கள் மனதிற்குள்ளே கூடு கட்டும். அதை கலைக்கவே முடியாத அளவுக்கு கட்டும். பாரங்கள் அதிகமாகி இதயம் பாராங்கல் அளவுக்கு கனக்கும்.

மனதில் கேட்க…
1. நான் எதற்காக ஆண்டவரை நெருங்கி வர தயங்குகிறேன்?
2. ஆண்டவரை நெருங்கி வர தயங்கினோம் என்றால் பேரிடர் விரைவாக வரப்போகிறது என்று அர்த்தம் – இது நல்லா புரிகிறதா?

மனதில் பதிக்க…
பன்முறை அவர் அவா்களை விடுவித்தார். அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர். தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர் (திபா 106:43)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.