தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார்.

இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு கெளரவம் இருக்கிறது. நான் எனது வாழ்வை, மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். நிச்சயம் அது பாராட்டப்பட வேண்டியது, என தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக பேதுரு இந்த கேள்வியை எழுப்புகிறார். தற்பெருமை ஒருவனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதால், இயேசு இந்த எச்சரிக்கை செய்தியைத் தருகிறார். கடவுளின் பணியாளர் என்பது நமக்கு அழிவுக்கு அழைத்துச் செல்லும் தற்பெருமையை அல்ல, மாறாக, தாழ்ச்சியை நமக்கு நிறைவாகத் தர வேண்டும்.

கடவுளின் பணிக்காக நான் எனது வாழ்வை கொடுக்கலாம். பொருள் கொடுக்கலாம். பணம் கொடுக்கலாம். நான் கடவுள் பணிக்கு கொடுக்கிறேன் என்கிற தற்பெருமை, நமது தியாகத்தை உருக்குலைத்து விடும். கடவுளுக்காக, கடவுளின் பணிக்கா நம்மையே நாம் தியாகம் செய்கிறபோது, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு நம்மை ஒப்படைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.