தலைசிறந்த கட்டளை எது?

மத்தேயு நற்செய்தியில் ”போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்ற கேள்வி, இயேசு சதுசேயரை வாயடைக்கச்செய்தார் என்பதைக்கேள்விப்பட்டவுடன் கேட்கப்பட்ட கேள்வி. அது இயேசுவை தாக்குவதற்காக, அவரில் குற்றம் காண்பதற்காகக்கேட்கப்பட்ட கேள்வி. ஆனால், மாற்கு நற்செய்தியில் இதனுடைய பிண்ணனி வேறு. இயேசுவை பாராட்டும்படியாகச்சொல்லப்பட்ட கேள்வி.

இயேசு மதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை இங்கு தருகிறார். மதம் என்பது அன்பை அடிப்படையாகக்கொண்டது. அன்பில்லையென்றால் அது மதமல்ல. இந்த மதம் இரண்டு அடித்தளங்களைக்கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. 1. இறையன்பு 2. பிறரன்பு. இந்த இரண்டில் முதன்மையான இறையன்பு. இறையன்பு இல்லாத இடத்தில் பிறரன்பு இருக்க முடியாது என்பது இயேசுவின் போதனை. கடவுளுக்கான அன்பு நம்மிடத்தில் பல வழிகளில் வெளிப்பட வேண்டும். நம்முடைய உறவில், உணர்வில், வாழ்வில், எண்ணத்தில் கடவுளன்பு வெளிப்பட வேண்டும். இந்த அன்பு இருக்கிறபோதுதான் பிறரன்பு நம்மில் உருவாகும். ஏனென்றால் மனிதன் என்பவன் வேதியியல் பொருளின் கலவையில்ல, படைப்பின் வெறும் பகுதி அல்ல, மாறாக, கடவுளன்பின் வெளிப்பாடு. கடவுளன்பில் பிறந்தவன் தான் மனிதன். எனவேதான், கடவுளின் சாயலைப் பெற்றிருக்கிறோம்.

நமது வாழ்வில் இறைவனை அன்பு செய்ய பழகிக்கொள்வோம். இறைவனை அன்பு செய்கிறபோதுதான் நம்மால், மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்கள் தவறு செய்கிறபோது, அவர்களை மன்னிக்க முடியாமல் இருப்பது கடவுளை அன்பு செய்யாததன் வெளிப்பாடுதான். கடவுளன்பில் நாம் உறுதியாக இருந்தால், மற்றவர்களை நம்மால் மன்னிக்க முடியும். அன்பு செய்ய முடியும். நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ள முடியும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.