தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14

யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான தருணங்களில் பெற்றிருக்கிற நம்பிக்கையை வெகு எளிதாக இழந்துவிடுகிறார்கள். இது குற்றப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, யதார்த்தமான உண்மை. இப்படிப்பட்ட துன்பமான தருணங்களில் இறைவனின் அருளுக்காக மன்றாடுவோம். இறைவனின் ஆசீரை வேண்டிநிற்போம் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார்.

இறைவனில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்பது, இந்த திருப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்கிற செய்தி. எத்தகைய இடுக்கண் நம்மை வருத்தினாலும், அவையும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையை, இறைவன் மீது வைப்போம். வாழ்வில் நல்லது நடக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.