தலைப் பேறு ஆண்டவருக்கு அர்ப்பணம் !

ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் என்னும் திருச்சட்டத்தின்படி இயேசுவின் பெற்றோர், குழந்தை இயேசுவைக் கோவிலுக்கு எடுத்துச்சென்று அர்ப்பணித்த நிகழ்ச்சியை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம். நமது குழந்தைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த நிகழ்வு நமக்குத் தருகிறது. பாரசீகச் சிந்தனையாளர் கலீல் கிப்ரான் குழந்தைகளைப் பற்றிக் கூறிய பின்வரும் சிந்தனை நம் கவனத்தை ஈர்க்கிறது. ”உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர். அவர்கள் கடவுளின் குழந்தைகள். உங்கள் வழியாக இறைவனால் உலகிற்குத் தரப்பட்டவர்கள்.” எனவே, பெற்றோர் தம் குழந்தைகளை தமக்கென்று வளர்க்காமல், இறைவனுக்கு உரியவர்களாக, இந்த சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும். அன்னை மரி தம் தலைப்பேறான குழந்தையை ஆலயத்தில் அர்ப்பணித்து, இந்த உலகம் உய்வதற்காக அவரை ஈகம் செய்தார். அதுபோலவே, ஒவ்வொரு தாயும் தம் பிள்ளைகளை ஆன்மீக ரீதியில் மட்டுமல்ல, சமூக ரீதியிலும் அர்ப்பணிப்பு செய்யவேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அழைப்பு.

மன்றாடுவோம்: அனைவருக்கும் தந்தையாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற குழந்தைச் செல்வங்களுக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமது கொடைகள், உமக்கே உரியவர்கள் என்று உணர்ந்து உம்மிடம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கென்று நீர் என்ன திட்டம் வைத்திருக்கிறீரோ, அதன்படியே அவர்கள் வாழ அருள் தாரும். குழந்தைகளை எங்களுக்கென்று சொந்தம் கொண்டாடாமல், அவர்கள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் உரியவர்கள் என்ற உணர்வில் அவர்களை வளர்க்க எமக்கு வரம் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.