தவறுகளை தனியே திருத்து…

மத்தேயு 1:18-24

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

சிலர் தவறுகள் செய்யும்போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு நாம் பொது இடத்திலே திருத்த விழைகிறோம். இதனால் தவறு செய்தவரின் மனம் உடைகிறது. இப்படி செய்வதனால் அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சியும் மறைகிறது. தவறு செய்தவரை எப்படி திருத்த வேண்டும் என்பது பற்றி யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லித் தருகிறார். அன்னை மரியாள் அவரோடு கூடி வாழும் முன் அவர் கருவுற்றிருந்தது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிடத் திட்டமிட்டார். நாமும் மறைவாக தனியே அழைத்து தவறுகளை திருத்தினால் இரண்டு ஆச்சரியங்கள் நடக்கும்.

1. அடுத்தவருக்கு உயர்வு
தவறுகளை பொதுவில் சுட்டிக்காட்டும்போது அந்த நபருக்கும் நமக்கும் பகைமை வளரத் தொடங்குகிறது. அதற்கு மாறாக, அடுத்தவரின் தவறுகளை நாம் தனியே பண்போடு திருத்தும்போது அவர் மனம் பெரிதும் பாதிப்படைவதில்லை. அவர் மனம் உயர்வு அடைகிறது. ஊக்கம் பெறுகிறார். இப்படிப்பட்ட தவறுகளை இனி செய்ய கூடாது என்ற பிரதிக்கினை செய்கிறார். சாதிப்பதற்கான வேகம் தனியே திருத்தும்போது அவருக்கு கிடைக்கிறது.

2. நமக்கும் உயர்வு
நாம் பொது இடத்தில் யாரையும் கண்டிக்காமல் தனியே அழைத்து திருத்தும்போது அது நமக்கு பெருமையை பெற்றுத் தருகிறது. நம்மை பற்றி உயர்வாக நினைக்க அது வழிவகை செய்கிறது. நம்மை பற்றி பிறர் இவர் உயர்ந்த மனிதர் என்று வெளியே சொல்வதற்கான வாய்ப்பையும் அது ஈட்டித் தருகிறது.

மனதில் கேட்க…
1. அடுத்தவரின் தவறுகளை பொதுவில் திருத்த மிக வேகமாக நான் முயற்சி செய்கிறேனா?
2. தனியே அழைத்து இனி அடுத்தவரின் தவறுகளை பண்போடு திருத்தலாமா?

மனதில் பதிக்க…
யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார் (மத் 1:19)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.