தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்

யோவான் 4: 43-54

இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது.

அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது.

மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம், நம்பிக்கைத் தளர வைத்திருக்கலாம். ஆனாலும் அவர் சோர்வுறவில்லை. நாம் நமது இறைநம்பிக்கையில் எப்படி? என்பதைச் சிந்திக்கின்ற நல்ல தருணம் இது. சிறிய துன்பத்திற்கும், சோதனைக்கும் பயந்து இன்று ஆண்டவரை விட்டு ஓடுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சில பிரிந்து போன கிறித்தவர்களிடம் நீங்கள் ஏன் போய்விட்டீர்கள்? என்றால் கத்தோலிக்கக் குருக்கள் கன்னியர்கள் சரியில்லை அதனால்தான் நான் வேறு சபைக்குச் சென்று விட்டேன் என்பார்கள். இதனை யார் மனதையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை. மாறாக, சின்ன சோதனைகளைக் கண்டு அஞ்சாமல், அதனை வெல்ல அவரைப் பற்றிக் கொள்ளாமல் அவரை விட்டு விலகி ஓடுவது என்ன அறிவு. சோதனைகள் எந்த வடிவிலும் வரலாம். இறைவனே அதனை அனுமதிக்கலாம். ஆனால் எந்நிலையிலும் அரச அலுவலனைப் போல ஆண்டவரைப் பற்றிப் பிடித்தால் நம் வாழ்வில் அடையாளங்களும் அதிசயங்களும் நடக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.