தாழ்ச்சி நிறைந்த உள்ளம்

அரச அலுவலர் ஒருவர் தனது மகனுக்காக இயேசுவைத்தேடி வந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. யார் இந்த அரச அலுவலர்? அரசரின் அவையில் பணிபுரியக்கூடியவருக்கு தச்சுத்தொழிலாளியின் மகனிடம் என்ன வேலை? அரச அலுவலர் ஏரோது அரசரின் அவையின் பணிபுரியக்கூடியவராக இருக்கலாம். இயேசு கானாவூரில் இருக்கிறார். அலுவலரின் சொந்த ஊரோ கப்பர்நாகும். கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையேயான தொலைவு 20 மைல். இங்கே, அரச அலுவலரின் தாழ்ச்சி நிறைந்த நம்பிக்கை நமக்கு உதாரணமாக தரப்படுகிறது.

அரசருடைய அவையில் பணியில் இருக்கிற அதிகாரிக்கு பல சலுகைகள் நிச்சயம் இருக்கும். அரண்மணையில் பணிபுரியும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நிச்சயம் அவருடைய மகனுக்கு சிகிச்சை அளித்திருப்பார்கள். அரசரின் அலுவலகத்தில் பணிபுரிகிறவர் இயேசுவைத் தேடி வந்தால், அது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். தான் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கிறேன். எனவே, ஆளனுப்பி இயேசுவை அதிகாரத்தோடு, அழைத்து வர ஆணையிட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, இயேசுவை அவர் தேடி வந்தது, அவருடைய தாழ்ச்சியையும். இயேசு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இயேசுவை நாம் நம்பி வருகிறபோது, நம்மிடத்தில் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருக்க வேண்டும். நமக்குள்ள அனைத்தையும் விட்டு விட்டு, நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு அவரைத் தேடி வர வேண்டும். அந்த தாழ்ச்சிநிறைந்த உள்ளம் தான், இயேசுவின் வல்லமையை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய மிகப்பெரிய ஆயுதம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.