திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20
திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்?

சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம் தொடக்க கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த உறுதியான விசுவாசம் தான், சவுலை சிந்திக்க வைத்திருக்கும். இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால், கிறிஸ்தவ திருமறையில் உறுதியாக நிற்க முடிகிறது? தங்களது உயிரை இழக்கவும் முடிகிற துணிவு எங்கிருந்து வருகிறது? கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த அந்த ஆழமான விசுவாசம், சவுல் கிறிஸ்தவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை அசைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், சவுல் சிறந்த கல்விமான். உண்மைக்கு திறந்த உள்ளத்தோடு செவிமடுக்கிறவர். ஆக, தனக்கென்று நம்பிக்கை இருந்தாலும், திறந்த உள்ளத்தோடு உண்மைக்கு செவிகொடுக்க தயாராக இருந்த அந்த தாராள உள்ளம் தான், உண்மையான இறைவனைப் பற்றிப் பிடிப்பதற்கு, அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.

நாம் எப்போதும் திறந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும். நான் சொல்வது தான் சரி? என்று, மூடிய மனநிலையோடு, இறுகிய மனநிலையோடு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நிச்சயம் நம்முடைய வாழ்க்கை வளர்ச்சிப் பாதையை நோக்கியதாகவே இருக்கும். எந்த நேரத்திலும் நாம் சறுக்கி விழ மாட்டோம். அந்த திறந்த உள்ளத்தை இறைவன் நமக்குத் தர வேண்டுமென்று மன்றாடுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.